Monday, January 20, 2014

ஒரு வானம்பாடியாய் இருப்பது அவ்வளவு எளிதானதன்று

வானம்பாடியாய் இருப்பதற்கு முதலில் ஒரு தகுதி வேண்டும்,

கூண்டுக்குள் அடைபட்டிருக்கக்கூடாது.

கண்டதை எல்லாம் உண்ணும் பழக்கம் அதற்கு கிடையாது.

தேர்ந்த தேர்ந்தெடுத்த உணவுகளை

மிகவும் கவனமாக விழிப்புணர்வோடு உண்ணும் பழக்கம் கொண்டது.

முக்கியமாக பறவை என்ற வகையில்

அதனை கிளியோடு எப்போதும் ஒப்பிட்டுவிடக்கூடாது.

அதன் பாடல்கள் மிகுந்த செறிவும் சரியான உணர்வும் கொண்டவை

எல்லா இடங்களிலும் எல்லா பாடல்களையும் அது பாடுவதில்லை.

அதனினும் முக்கியமாக

யாருடைய பாடல்களையோ சொற்களையோ

அது தன்குரல்வழி சொல்வதுமில்லை.

வானம்பாடியின் பாடல்கள் மிகுந்த தனித்துவம் கொண்டவை.


முதலில் அது பசுமை கொண்ட; வசந்தம் வீசும்,

நச்சுகலவாத காற்றுகொண்ட நிலங்களின்மேல் பறந்துசென்று

அதனதன் குணாதிசயங்களை

தனது ஒவ்வொரு சிறகசைப்பிலும் நெஞ்சோடு சேகரிக்கிறது.


பிறகு கண்களை மூடி

உயிர்கள் வாழ தகுதியற்ற ஆனாலும்

மிகுந்த நம்பிக்கையுடன் வாழும் மனிதர்களும்

அவர்களின் நாய்களும் இருக்கும் நிலம்வரை

பறந்து சென்று

அவர்களின் அவலங்களை போராட்டங்களை

நம்பிக்கைகளை மிகவும் கவனமாக

தன் கண்களின் வழி

நிழற்பட நியாபகங்களாய் மூளையில் பதிந்து எடுத்துவருகிறது

தனது கூட்டிற்கு.



இப்போது பல்வேறு நிலங்களின் பாடுகளையும்

மிகுந்த கவனமுடன் பகுப்பாய்வு செய்கிறது.

செறிந்த சொற்களில் சரியான உணர்வுகொண்ட

தனித்தனியான பாடல்களை பாடிப்பார்க்கிறது.

மிகுந்த கவனமுடன் சரியான உணவெடுத்துக்கொள்கிறது

அடுத்த சில நாட்களுக்கு.


இப்போது வசந்தம் வீசும் நிலத்தின் மேல் பறந்து சென்று

மிகச்சரியான பாடலொன்றை

எல்லோரும் குழுமி இருக்கும் ஒரு சதுக்கத்தில்

தனது இனிமையான குரலெடுத்து

கருப்புநிலத்தின் அவலங்களை தெளிவாகப்பாடத்தொடங்குகிறது…

அந்த பாடல் இப்போது எல்லா நிலங்களின் வானத்திலும் பறந்துசெல்கிறது



வானம்பாடிக்கு தெரிந்தே இருக்கிறது அதனால் முடிந்தது

இந்த பாடலை சரியாகப்பாடுவது மட்டும்தான்


ஆனாலும் அதன் உழைப்பு அபாரமானது

முனைப்பு தன்னலமற்றது

சுயத்தில் தெளிவானது

அதன் முயற்சி மிகுந்த அபாயம் கொண்டது.


அதனால்தான் சொல்கிறேன்,

ஒரு வானம்பாடியாய் இருப்பது அவ்வளவு எளிதானதன்று…


உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/uyirosai/ViewIndex.aspx?eid=306&edtypeid=2

நள்ளிரவில் உலவும் புலிகள்

எல்லோரும்  உறக்கத்திற்கு ஆயத்தமான பிறகு
நான் வெளியே செல்வேன்
ஒரு அணைக்கப்பட்ட கைவிளக்கோடு…
விசையை சுண்டி
நெருப்புசுவாலையைப்  புகைப்பானில் பொருத்தும்போது
மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியே வரும் அந்த ப் புலி…
வனாந்திரத்தின் எதிரில் உள்ள எனது வீட்டில்
அந்தப் புலியுடன் நான் கொண்ட சிநேகம்
எனக்கும் நள்ளிரவிற்கும் மற்றும் அந்தப் புலிக்கும் மட்டுமே தெரியும்
தனது முன்னங்காலை நாவால் எச்சில்படுத்தி
கண்களின் பீளையையோ கண்ணீரையோ துடைத்தபடி
எனக்கு முன்னே வந்து அமரும்
இருவரும் வெகுநேரம் பேசி இருப்போம்
எங்கள் இருப்புபற்றி
எங்களின் கடந்தகால வாழ்வுபற்றி
கண்களில் பற்றிஎரிந்த சுவாலை பற்றி
எங்களின் கட்டற்ற மூர்க்கம்பற்றி
நாங்கள் எப்படி நரிகளை ப் பின்னங்காலால்
அனாயாசமாக எக்கி உதைத்தெரிந்தோம் என்பதுபற்றி
நாங்கள் எப்படி அடிமையாய் மாறிப்போனோம் என்பதுபற்றி
இப்போது எங்களைப் பிடித்து தொங்கும்
இந்த தனிமையைப்பற்றி
விடியலில் நரிகள் விழித்தெழுந்து
பாசம் வழியும் கண்களோடு
எங்களை நோக்கி வர ஆயத்தம் ஆகும்போது
சுவடுகளை அழித்துவிட்டு
மிகுந்த தந்திரமுடன்
யாவரும் அறியாமல் எங்கள் படுக்கைகளுக்குள்
உறங்கப்போவோம்
கடைசியில் ஒன்று சொல்கிறேன்
எனக்கு இதுவரை புலியின் பாசை தெரியாது
புலிக்கும் அப்படியே என்றுதான் நம்புகிறேன்
ஆனால் நாங்கள் இதைதான் பேசிக்கொண்டோம்
என்பதை நான் திண்ணமாகக் கூறுவேன்
ஏனெனில், நள்ளிரவிற்குப் பிறகு
யாவரிடமும் பேசிக்கொள்ள
இதைத்தவிர வேறொன்றும் இல்லை!!!

உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4285


அது அன்று அப்படி வந்தது

வாழ்வின் ஆழத்திலிருந்து
எழுந்து வந்த மனிதன்
அம்மணமாய் இருந்தான்
அசிங்கமாய் இல்லை
என் முன்னால் அமர்ந்து
எனக்காக ஒரு தேநீர் போடச்சொன்னான்
மிகவும் ரசித்துப் பருகினான்
“பாம்புகள் துரத்தும் பரமபதத்தில்
ஏணிகளை மாற்றி வைக்கும்
தந்திரக்காரன் நீ!
புணரும் முன் அவ்வளவு பொய் சொன்னவன்
முடிந்தவுடன் உத்தமன் என்கிறாய்!
தீப்பெட்டி கையிலிருந்தும்
கொளுத்தாமல் நிற்கிறாய்
இருள் பிடிக்குமென
எவனோ சொன்னதற்கு!
இந்த ஆடைகளைப் பார்
எவ்வளவு அழுக்கு
கழட்டிப்போடு!” என்றான்.
அம்மணமாகிவிடுவேன்,
அசிங்கமாகிவிடும்.
நானென்ன அசிங்கமாகவா இருக்கிறேன்?
இல்லை! எனக்கே கொஞ்சம்
அருவருப்பாய் இருக்கிறது
இருப்பினும் இப்படியே
என்னால் வெளியே செல்ல முடியாது.
சரி! இங்கே தற்கொலை செய்துகொள்ள
ஒரு இடம் கிடைக்குமா?
நான் உள்ளறையைக் காட்டினேன்
போய் முயற்சிசெய்!
சொல்லிவிட்டு வாழ்வின்
ஆழத்திற்கே சென்றுவிட்டான்

உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1899

அன்புள்ள அதிகாரிக்கு

அன்புள்ள அதிகாரிக்கு

“டேய் …க்காளி
அடிச்சுப் பேத்துருவேன்
என்ன பெரிய இவனா நீ
தோ பார்!
இதெல்லாம் வேற எவன்டியோ வச்சுக்கோ
என்னால பண்ண முடியாது
என்னா பண்ணுவ நீ!”
வார்த்தைகள் தேநீரில்
கொதித்துக் கொண்டிருந்தன
இரண்டு கோப்பைத் தேநீரும்
பத்துத் தீக்குச்சிகளும் தீர்ந்த பின்,
“யா! இன்னும் ஒன் ஹவர்ல
மெயில் பண்றேன்”
வார்த்தைகள் வெளியில் வந்தன.

சவளை குடியானவனின் வளமை தேசம்
கருமை ஏறிப்போன இரவில்
வெறியேறித் துடிக்கும் விரல்கள்
தட்டும் ஒவ்வொரு பொத்தானிலும்
செத்து விழுவர் ஒவ்வொருவர்
கிளம்பிப் போகும் முன்
சிதறிக் கிடக்கும் குப்பைகளோடு
கூட்டி எடுத்துக் கொட்டிவிட்டுச் செல்வர்
சிதறிய கெட்ட வார்த்தைகளையும்
அடுத்த பகலில்
சபையில் வீற்றிருப்பர்
அமைச்சர்கள் மற்றும் அரசர்கள்!
நாட்டின் வளமை பற்றி
சொல்லிக்கொண்டிருப்பான்
குருதியும் குண்டியும் சுண்டிப்போன
சவளைக் குடியானவன்

இன்று விடிகாலை மிதமான மழை பெய்திருந்தது
குளித்துத் தலை உதறிய
ஈரத்துடன் நின்றிருந்தன
புளியமரங்கள்
இரவைப் பிழிந்து கொட்டிவிட்டபடி
பளீர் தார்ச்சாலை
“வாங்க பாஸு” டீ மாஸ்டரின்
சந்தோசம் என் மீதும் தெறித்தது
மொறுமொறுப்பான மசால்வடைகள்
தின்ன அழைத்தன ஐந்து மணிக்கே
நான்கு மணிக்கு வீட்டில்
விளக்கு எரிந்தது பற்றி
நக்கல் பேசி இருந்தனர்
பேருந்துக்குக் காத்திருந்த
தினக்கூலிகள்
போர்வையை பிழியாமல் உதறியபடி
கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டே
பிச்சைக்காரர்கள்
சாந்தமாய் அசைபோட்டுகொண்டிருந்தன
பொதிகாளைகள்
எப்போதும் குரைக்கும்
குட்டிநாயோடு சேர்ந்து
வாக்கிங் பெண்ணும் குறுநகை
புரிந்தாள்
இன்று விடிகாலை
மிதமான மழை பெய்திருந்தது
*
உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1509

சாமக்குரங்கின் இசையழகி

சாமக்குரங்கின் இசையழகி
இசையோடு கூடிய பாடலின்
குரல் மட்டும் பிரிந்து வந்து
என் காதுகளைக் கடித்தபடி
வந்து கொண்டே
இருந்தது…
குடுகுடுப்பைக்காரன் விட்டுச் சென்ற
வசீகர ஒலியென…
உறக்கத்திற்கு சற்றுமுன்
என் அருகில் படுத்திருந்தது!

ஒரு கடவுச்சொல் வேண்டும்
“இதையெல்லாம் கடந்துபோக
ஒரு கடவுச்சொல் வேண்டும்
பகிரமுடியா கரும்பொழுதுகளை
நுகரமுடியா நுண்வாழ்க்கையை
நட்பெனப்படாத நட்புகளை
நட்புமட்டும் கேட்கும் காதலிகளை
காதல் மட்டும் கேட்கும் தோழிகளை
அடிமைவாசம் அடிக்கும் சம்பளத்தை
பிச்சை எடுக்கும் குழந்தைகளை
செத்தபிறகும் சிதைக்கப்படும் யோனிகளை
கொட்டடியில் தட்டப்படும் குறிகளை
இலக்குகள் அற்ற கவிதைகளை
கவிதைகள் பிறக்காத நிகழ்வுகளை
காகங்கள் கரையாத காலைகளை
சிறுபிள்ளைகள் விளையாடாத மாலைகளை

தலைவனின் சகிக்க முடியா பணிவை
ஓநாய்களின் பாசம் வழியும் கண்களை
கடந்துபோக ஒரு கடவுச்சொல் வேண்டும்,
சொல்லுங்கள் தியானம் செய்பவரே”
“மனம்பிறழ்ந்து போ அல்லது மரணம் தழுவு”
“அதெல்லாம் முடியாதுங்க”
“கடந்து போ அல்லது கலகம் செய்”
“என்னங்க முன்ன சொன்னதயே
வேற மாதிரி சொல்றீங்க?”
“இல்லையெனில், என்னோடு வந்து தியானம் செய்!”
“போய்யா… டவுசரு…”

உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1417

ஒரு சிணுங்கலுக்குப்பின்...

ஒளியற்ற கனவுகளில் 
 மினுங்கி மினுங்கி
 சிணுங்குகின்றன
 சில ஞாபகங்கள்
 பனிக்காலத்து நட்சத்திரங்களாய்.


ஒரு மினுங்கலில் தெரிகிறது
 மேஜையில் ஒற்றை
 மெழுகுவர்த்தி.
 விழிகளில் எரியும்
 இரட்டை மெழுகுவர்த்திகளில்
 இருந்து வழிந்தோடுகிறது சுடுநீர்.


ஒரு சிணுங்கலில் தெரிகிறது
ஒரு சயனஅறை.
மார்பகங்களின் சிறு பிறைகுறியீடுகளில்
உறைந்திருக்கிறது குருதி.
தேம்பல்களில் அடர்த்தியாகிறது இரவு.


ஒரு மினுங்கலில் தெரிகிறது
ஒரு வெள்ளைப்புறா.
வெல்வெட் துணியிலிருந்து விழுகின்றன
ஈரமான சிவப்பு ரோஜா இதழ்கள்
வெளியெங்கும் நிறைகிறது
அன்பின் நறுமணம்

  
ஒரு சிணுங்கலில் தெரிகிறது
பாதி  நிலவும் பாதி சூரியனும்.
விரியும் புன்னகையில்
முழுமையடைகின்றன நிலவும் சூரியனும்
மற்றும் ஒரு மூச்சுத்திணறும் முத்தமும்.


ஒளிநிரப்பும் காலையில்
புதிதாய் பூத்திருந்தது
பனிதாங்கிய
சிவப்பு மலரொன்று



நினைவுகளின் ரணசிகிச்சை

மலைச்சிகரத்தின் உச்சியில் நடைபெறுகிறது
நினைவுகளின் ரணசிகிச்சை
நினைவுகளிலிருந்து கசியும் கசப்பின் ரத்தம்
நஞ்சாகி காற்றில் கரைகிறது

நச்சுக்காற்றின் அழுத்தத்தில்
கால்பிடித்து இழுக்கப்படுகின்றன
நினைவுகள்
கால்களை கட்டிப்பிடித்து கதறிக் கதறி
அழுதுகொண்டிருக்கிறது காதல்

பள்ளத்தாக்கின் ஆழத்திற்குள்
சத்தமின்றி சிதறிப்போகின்றன
நினைவுகள்

மலைமுகட்டின் மேல் மிதந்துகொண்டிருக்கிறது
அழுகை தீர்ந்த காதல்

உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2440

இரண்டு கவிதைகள்

கதவுகளில் வாழ்ந்த பறவைகள்

சாத்தப்பட்ட கதவுகளின் முன் நிற்கும்போதெல்லாம்

உள்ளிருந்து ஒலிக்கிறது கீகீ என்ற பறவையின் குரல்
ஆனாலும் கதவுகளால் தான் வாழ்கின்றன
எலெகட்ரானிக் பறவைகள்
கதவுகளில் வாழ்ந்த பறவைகள்
பற்றி குறிப்புகள் ஏதும் இல்லை

நிர்வாணம்

நிர்வாணம் பற்றி பேசுபவளை  ஒருவனுக்கும் பிடிப்பதில்லை
நிர்வாணம் பற்றி பேசுபவனை ஒருத்திக்கும் பிடிப்பதில்லை
நிர்வாணம் பற்றியே பேசும் இருவர் சேர்ந்து இருப்பதில்லை
இங்கு நிர்வாணம் பற்றி யாருக்குமே தெளிவில்லை



உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2530

புல்வெளியில் கால்நனைப்பவை பனித்துளிகள் அல்ல

ஆகச்சிறந்த நிலக்காட்சி ஓவியம் போல இருந்தது.
அந்தப் பரந்த பசுமைப் பள்ளதாக்கின் ஒருமுனையிலிருந்து
தூரத்தில் நிற்கும் ஒற்றைமரம் நோக்கி
உன்கொலுசுகள் தெரிய
தங்கநிறசரிகை கொண்ட பாவாடையை
சற்றே தூக்கிப்பிடித்தபடி
நீ நடக்கத் தொடங்கியபோது.

அந்த குளிர்நிறைந்த இரவில்தான்
உன்வீட்டில் எல்லோரும் உறங்கியபின்
வரச்சொல்லி இருந்தாய்.

அந்த நாளில் உன் வீட்டில்
எல்லாரும் உறங்குவார்களா எனத்தெரியாது
இரவு கவிழ்ந்தவுடன் காத்திருக்கத்தொடங்கினேன்
நீ என்ன சொல்வாய் என எனக்குத் தெரிந்தே இருந்தது
நான் என்ன செய்வேன் என்றும் உனக்குத் தெரிந்தே இருந்தது.
அப்புறம் எதற்கு இந்தப் பாசாங்குகள்.
தெரிந்தே இருப்பினும் சொல்லப்படாதவரை
சொற்களுக்கு அர்த்தமில்லை. உணரப்படாத முத்தம் போல

வந்தாய். நின்றாய்.சொன்னாய்.
மிக்க அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்தது நிலவு.
என்னிடம் வார்த்தைகள் இல்லை.
ஆகாயத்திற்கும் புல்வெளிக்கும்
இடையிலான வெறுமை முழுதும்
என்னிடம் இருந்தே நிரம்பியதாக
விம்மிக்கிடந்தது நெஞ்சம்.

திரும்பி நடக்கத் தொடங்கினாய்
ஒரு தொல்கனவென.
உனக்குத் தெரிந்தே இருக்கும்
என்ற நம்பிக்கையில்
சொல்லாமல் விட்டேன்
நீ நடந்து செல்லும் புல்வெளியில்
உன் கால்நனைப்பவை பனித்துளிகள் மட்டும் அல்ல.

உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3989

விகடனில் வெளியான கவிதைகள் -2

மீதமிருக்கும் உயிர்


பள்ளிவிட்டுச்செல்லும் சிறுமி
மதிலோர வேம்புத்தளிர்மேல்
ஊற்றிச்செல்லும்
புட்டித் தண்ணீரின் மீதத்தில்
உயிர்வாழ்கிறது உலகம்

இனிய இரவில் சில வருத்தங்கள்

அதிவேக பேருந்தின்
முன்னால் பறந்து சென்ற
சொற்கள் எல்லாம் உள்வந்து
விழுந்தன,
‘மெசேஜ் சென்டிங் பெயில்டு’
காலையில் கூட்டும்போது
செத்துக்கிடந்தன இனிய இரவுகளும்
சில முத்தங்களும்.
துடித்துக்கொண்டிருந்தன

சில வருத்தங்கள் மட்டும்.

விகடனில் வெளியான கவிதைகள் -1

மழை

அந்த நிழற்குடையின் கீழ்
மழையில் நனைந்த அனைவரும்
நெருக்கிக்கொண்டு நிற்கிறோம்
மழை விட்டு கலைந்தபோதுதான்
கவனித்தேன்,
என் இடப்புறம் நின்றிருந்தவர்
கையில் மடிக்கணினி இருந்தது
வலப்புறம் நின்றிருந்தவர்
கையில் திருவோடு இருந்தது
என் கையில் மழை இருந்தது

ஜீவகாருண்யம்

“எஜமானி குழந்தைபெற்றுவிட்டாள்”
டைகரும், ரோஸியும் கிசுகிசுக்கின்றன
சந்தோசமாக வால்களை ஆட்டியபடி!
அக்கம் பக்கத்து மனிதர்களை
அன்று மட்டும் முறைக்காமல்
வாலாட்டி வரவேற்றுக்கொண்டே இருந்தன
வீட்டு மனிதர்களை போலவே!
கவிதைப் புத்தகங்களை
கலைத்துப்போட்டு விளையாடுகிறாள்
சின்ட்ரெல்லா.

மழலை மழை

“பாப்பா கவிதை படிக்கறீங்களா
எந்த கவிதை பிடிச்சிருக்கு சொல்லுங்க!”
எனக் கொஞ்ச
பால்பற்கள் தெரிய “ப்ப்பூவா…” என
புதுக்கவிதை  ஒன்றை சொல்கிறாள்
அவ்வளவு ரம்யமாய் இருக்கிறது
ப்ப்பூவா கவிதைகளின் இசை

இசை வீடு

கருப்பு வெள்ளை கற்கள்
பதிக்கப்பட்ட வீட்டில்
கொலுசுமணிகள் சிணுங்க
தத்தித் தத்தி நடக்கையில்
பிரியாகுட்டியின் வீடு
பியானோ வீடாகிறது

அடுக்குமாடி குடியிருப்பு

அந்த அடுக்குமாடி குடியிருப்பின்
வாகனங்கள் நிறுத்துமிடத்தில்
சொற்ப எண்ணிக்கை கூடி இருந்தது.
பக்கத்து வீட்டின் ஜன்னலில்
தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது.
மெல்லிய விசும்பல்கள் எழுந்தன.
லேசான சலசலப்புக் கேட்டது.
எதிர்புறம் உள்ள சாலை
எப்போதும் போல் ஆனது.
தண்ணீர்விட்டுக் கழுவியதில்
சிதறிய ரோஜா இதழ்களும்
ஒரு தலைமுடியும் சேர்ந்துபோனது.
செய்திகள் பார்க்கவென
யாராலோ குறைந்த ஒலியுடன்
தொலைக்காட்சி போடப்பட்டது.
இன்று இந்த வீட்டில்
மிக்க நாகரீகமாக
ஒரு இழவு நடந்தேறியது.

பிங்-பாங் வார்த்தைகள்


பிங்-பாங் வார்த்தைகள்
உணர்ச்சிகளுக்கேற்ற சொற்கூட்டங்களை
நதியடியின் கூழாங்கற்களைப் போல
நாவினடியில் இளைப்பாறவிடுங்கள்
நம் விவாதங்களில் நம்மிடையே அவை வேலை செய்யட்டும்.
தட்டையான வார்த்தைகளை நீங்கள் சொல்லும்போது
வழவழப்பான ஒரு அட்டைப்பூச்சியை நெருங்குவதைப் போல
அதை நெருங்கிவர மிகவும் அசூயையடைகிறேன்.
அந்த இடைவெளியில்
என்னையொரு ஆமையென எண்ணி
என்னைவிட்டு விலகிப் போய்விடுகிறீர்கள்.
பிறகு என் சொற்களோடு நான் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன்
மனம் பிறழ்ந்தவனென என்னைவிட்டு முற்றிலுமாக விலகிப்போகிறீர்கள்
மிகுந்த பயமுடன்.
நான் முன்னிலும் தீவிரமாக சொற்களை சேர்த்துக்கொண்டு
மிகுந்த வன்மமுடன் கவிதை எழுதுகிறேன்
உலகத்தை பிங்-பாங் பந்தென சுவற்றில் எறிந்தபடி


கவிதைக்கு வெளியே ஏதோ இருக்கிறது
கவிதைக்கு வெளியே தனிமை தலைநீட்டி உங்களைப் பார்த்துக் கத்தும்போது
நீங்கள் மிகவும் பயந்துபோய் நெருங்கிவரத் தயங்குகிறீர்கள்.
ஓங்கி ஒருமுறை அதை நீங்கள் அடித்திருந்தால்
இந்நேரம் அது செத்துப்போயிருக்கும் இந்த வரிகளோடு சேர்ந்து.

பகல் முழுதும்
என் தோள்களைச் சுற்றிக்கொண்டே திரியும் அந்த வேதாளம்
நள்ளிரவிற்கு மேல் நீருக்குள் அமிழ்ந்துபோவதென
இருட்கடலோடு இரண்டற கலந்துவிடுகிறது
பிறகு கடல் என்னைச்சுற்றி அலையடித்துக்கொண்டிருக்கிறது.

அந்த புட்டியை உள்ளங்கையில் வைத்து உருட்டியவாறே
கருப்புநிற தொலைபேசியை எடுத்து எண்களை சுழட்டுகிறேன்
முன்னும் பின்னுமாய் உருண்டு சுழல்கிறது உயிர்.
அதோ அந்த இரண்டு வீடுகளுக்கு இடைப்பட்ட மிகவும் குறுகலான பாதையின்
இருமருங்கிலும் நின்றிருக்கும் பாதுகாப்பு அரண்களின் வேர்களில்தான்
வாழ்ந்திருக்கிறது வீடுகளின் தனிமை.

நன்றி உயிரோசை : http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5207