Monday, September 22, 2008

மறைந்த கனவுகள்

நீரின் மேற்புறம் சற்றே
சலனப்பட்டதும்
சரக்கென ஆழம் செல்லும்
மீன்குஞ்சுகளாய்

விழிக்கும் நொடியில்
மறைந்துபோகின்றன
என் தூக்கத்தின் மேல்
நடந்த கனவுகள்

ஜனா கே

Monday, August 11, 2008

போதும் எனக்கு...

சடசடவென ஆரம்பித்து
சட்டென நிற்கும் மழைக்குபின்
செம்மண் கொடுக்கும்
வாசத்திற்குநிகரான சுகந்தம்
வேறெதுவும்தருவதில்லை
-------------------------------------------------------------
ஒரே நாள் பிஸ்கட் உண்ட
பெட்டிகடை நாய்குட்டி
என் கைநக்கும் ஈரம் தரும்
மகிழ்ச்சியை போல்
வேறெதுவும் தந்ததில்லை
--------------------------------------------------------------
நீ எனை கை விட்ட
அந்த பனி இரவின்
அடர்த்தி போல்
நீளம் போல்
வேறெதுவும் இருந்ததில்லை

அந்த கடுன்குளிருக்கான
வெப்பத்தை என் செல்லநாயின்
கண்ணீர்போல்
எந்த கம்பளியின் கதகதப்பும்
தேநீரின் சூடும் தந்ததில்லை.
----------------------------------------------
ஓர் இறுகிய கணத்தைஇதமாக்க,
குளிர்ந்த தென்றலும்
சிறு மலரும்
போதாமல் இருந்ததில்லை.
ஜனா கே

Tuesday, July 29, 2008

ரஸ்கின் பாண்ட்

ரஸ்கின் பாண்ட் - யார் இது? அப்பிடின்னா என்ன? என்று கேட்பவர்களுக்கு ஒரு அறிமுகம். பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் பிறந்த, ஆனால் இந்தியாவை தாய்பூமியாக மனதில் கொண்ட ஒரு வேல்ஸ்- இங்கிலாந்து நாட்டை பூர்வீகமாக கொண்ட, நடந்து செல்வதை விருப்பமாக கொண்ட ஓர் எழுத்தாளர் (நான் இதை எழுதுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்).
நாவல், சிறுகதை, கவிதைகள், குழந்தை புத்தகங்கள் என பல தலங்களில் இயங்கியவர்.
எல்லாம் சரி, என்ன தீடீர்ன்னு இந்த மாதிரி எழுத ஆரம்பிசுடன்னு கேட்கிறிங்களா?இந்தா வந்துட்டன்.. கொஞ்சம் அப்பிடியே படிங்க உங்களுக்கே புரியும். (வேற வழி!)
இவரை, அனைத்து எழுத்து வகைகளை எனக்கு பிடிக்குமா என்பது வேறு கதை. ஆனால் இவரது புத்தங்களுக்கு யாரையும் முன்னுரை எழுத அணுகியதில்லை, அனுமதித்ததில்லை என்பது எனக்கு மிக்க பிடித்தது. அவர் சொன்ன பதில் "எனக்கு நன்றாக எழுத வரும் என்று எனக்கு தெரியும்; பிறகு எதற்கு முன்னுரை?". தன்னம்பிக்கை!!!

இவரது "சிறந்த சிறுகதைகள்" தொகுப்பை அண்மையில் உள் வாங்கினேன். (இப்ப புரிஞ்சிருக்குமே,- "ஆகா மொக்க போடாத"). கதை சொல்லியாக வரும் பாங்கு இவருடையது. ஆனால் நம்மை கை பிடித்து கூட்டி செல்லாமல், முதுகில் கை வைத்து தள்ளி விடுகிறார். ஆக, படிக்கும் நீங்களே உங்களை பார்த்துகொள்வீர்கள் அந்த எழுத்துவழியாக.

இவரது எழுத்துக்கள் இலக்கிய வகையில் சேராது என்று ஒரு வாதம் நெடுங்காலமாய் இருந்துவருகிறது. எனக்கு அப்பிடி தோன்றவில்லை.புரியாமல், உங்கள் கற்பனைக்கு எட்டாத ஒரு கற்பனையை உவமையாக சொல்லி குழப்பி சொல்வது தான் இலக்கியம் என்று இன்று ஒரு மாயை பரப்பிவிட்டார்கள்.
மக்களின் வாழ்க்கையை - வலியை, துக்கத்தை, சந்தோசத்தை, உணர்ச்சிகளை, தனிமையை, நட்பை, காதலை, வீரத்தை, இப்பிடியாக சொல்லி கொண்டே போகக்கூடியவற்றை செவ்வனே பதிவு செய்வதுதான் இலக்கியம். படிக்கும் பொது நீங்கள் உணரவேண்டும்.

சிறுபிராயத்து, புதுப்பித்து கொள்ள முடியாத ஒரு நட்பைபற்றி ரஸ்கின் சொல்லும்போது நம் ஒவ்வொருவர் உள்ளும் இப்பிடி ஒரு நட்பு புதைந்து கிடப்பதைஉணர்வோம்.

"என் தாத்தாவின் பங்களாவில் நான் இருந்த வருடங்கள் அவை" என்று அவர் சொல்லும்போதே நமக்கு நமது பள்ளிப்பருவத்து கோடை நாட்கள் நினைவுக்கு வந்து போகின்றன.
"அந்த பங்களாவின் பின் ஒரு குட்டை இருந்தது. மழைநீரால் நிரம்பும் வகையிலான குட்டை அது. அங்கே எல்லாம் போவது ஒழுங்கீனமான செயல் என்பது என் தாத்தா வரையறுத்தது. ஆனால் அங்கே போவது தான் என் குறிகோளாக இருந்தது." - அடம்பிடித்தது உங்களுக்கும் ஞாபகம் வருகிறதா? - இடையில கேள்வி கேட்காம கதைய சொல்றான்னு சொல்றது கேட்குது.
அங்கே எருமைகளை குளிப்பாட்ட அல்லது குளிர்விக்க ஒவ்வொரு மதியமும் ஒரு வெயிலால் கறுத்துப்போன என் வயது பையன் வருவான். அவனும் அந்த குட்டையில் இறங்கி நீச்சல் அடிப்பான், எருமையின் முதுகில் சவாரி செய்வான்.மறுநாள் மதியம் நானும் அங்கே போவது என்று முடிவு செய்து கொண்டேன். என் தாத்தா மதிய உணவிற்கு பின் உறங்கிய பின், அந்த குட்டையின் அருகில் போய் அமர்ந்துகொண்டேன் (மதில்சுவரை தாண்டி வரவேண்டும்). வெள்ளை வெளேர் என்ற என்னை பார்த்தும் அவன் என்ன நினைத்தான் என்று தெரியவில்லை," நீயும் வா நீச்சல் அடிக்கலாம்" என்றான். "எனக்கு நீச்சல் தெரியாது" என்றேன்.
"நான் கத்துதறேன்."
மெல்ல என் ஷூ களை கழட்டிவிட்டு கொஞ்சமாய் எட்டி வைத்தேன்.
என்னை பக்குவமாய் நீச்சல் அடிக்க வைத்தான்.அடுத்தடுத்த நாள்களிலும் இது தொடர்ந்து.
நான் வீட்டிற்க்கு வந்து யாருக்கும் தெரியாமல் குளித்துவிட்டு, சமர்த்தாய் இருந்துவிடுவேன்.
அவனுக்கு எழுத,படிக்க தெரியாது. எருமை மேய்பதும், பறவைகளை பற்றியும் நன்றாக தெரிந்து வைத்திருந்தான்.
நான் கிளம்ப வேண்டிய நாள் வந்தது. என் தாத்தாவோடு கிளம்பிகொண்டிருகிறேன்.நான் குட்டை பார்க்க செல்ல வேண்டும் என்று சொல்ல முடியாது. ஆக, அவனிடம் சொல்லிகொள்ளமலே கிளம்புகிறேன்.இன்றும் என் நினைவில் இருக்கிறது அந்த குட்டையும், அவனும்.
இதை நான் எழுதும்போதும் அவனுக்கு படிக்க தெரியாது. எனக்கு நீச்சல் கற்று கொடுத்தவனுக்கு, நான் ஏதும் கற்றுகொடுத்தேனா" என்னை தேடி இருப்பானா? நான் யாரிடமும் கேட்க முடியாது. எங்கள் நட்பு எனக்கும் அவனுக்குமே தெரிந்தது.

அவ்வளவு தான், இப்போது சொல்லுங்கள் இது என்ன வகை எழுத்து என்று.

ஜனா கே

Monday, July 21, 2008

நிறமாலை பொழுதுகள்...

"மேட்டூர்! மேட்டூர்! மேட்டூர்! "

"மேட்டூர் மட்டும் ஏறுங்க. பவானிக்கு முன்னாடி பஸ் இருக்கு போப்பா" - கனத்து ஒலித்து கொண்டிருக்கிறது கண்டக்டரின் குரல்.

எனக்கு என்ன ராசியோ (?) தெரியாது. எப்பவும் கடைசி சீட்டுதான் கிடைக்கும்!அதுல ஒரு சமூக சேவை செய்யலாம், நீங்களும் செஞ்சிருப்பிங்க.

"தம்பி, இந்த பேக் மட்டும் வச்சிருங்க, இறங்கும்போது வாங்கிகறேன்"

"ஹி ஹி பரவாயில்ல கொடுங்க"

"அண்ணா இந்த நோட் புக் இங்க வைக்கிறேன், ஸ்டெப்ஸ்ல தான் இருக்கேன் வாங்கிக்கிறேன்"

"ங்ஹே!" இப்படியாக பல பேருந்து சொந்தங்கள், சேவைகள்.

எப்பா!! ஒரு வழியா பவானி வந்தாச்சி. அப்பிடியே ஒரு 50 பேர் இறங்கி (அப்பாடா) 60 பேர் ஏறுவாங்க (ஹைய்யோ).
ஆனா இன்னிக்குனு பாருங்க அப்பிடி ஏதும் நடக்கல, பவானில கொஞ்சம் பேர்தான் ஏறுனாங்க..
"ஏப்பா! மூட்டைலாம் பின்ன வையிப்பா, கால் சந்துல வச்சுக்கிட்டு"

"இல்லைங்க எல்லாம் கண்ணாடி பாட்டிலு, நான் இங்கியே சீட் கீழ வச்சுகிறேன்"

"தம்பி (நான்தான்) கொஞ்சம் கால அகட்டுங்க"

"ஹம் போதுங்க, வச்சிட்டேன் அப்பிடியே கொஞ்சம் பார்த்துகங்க கீழ உருண்டற போகுது"

"ஹான் சரி சரி பார்த்துகறேன்"

இந்த சம்பவங்கள் முடிந்து பின் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு நான் கேட்டவை தான் இனி வருபவை…
காவிரி வளம் சேர்க்கும் பிரதேசங்கள் என் விழிக்கு எப்போதும் விருந்தளிக்க தவறுவதில்லை. அன்றும் அப்படிதான். கைகளில் தஸ்தயெவ்ஸ்கி யின் "சூதாடி", கண்களில் பச்சை கம்பள கண்ணாடி…

ஒரு பேருந்து நிறுத்தம், வழக்கமாய் உதிர்தலும் புதுப்பித்தலும்.

" அட மாப்ள! எங்க பார்த்து ரெம்ப நாள் ஆச்சுபோவ்!!! எப்பிடி இருக்கற?" - பேருந்தில் ஏறியவர், அந்த பாட்டில் மூடைகாரரிடம் கேட்டது இது.
"அட குமரேசா! வாப்பா. ஹும் அப்பிடியே போகுதுப்பா, இப்ப எங்க வேலைக்கு போயிட்டு இருக்ற. இந்த ரூட்ல வர? -

மூட்டைகாரர்"இங்கதான் மில்லுக்கு போறேன், நீயி? - குமரசேன்

"நான் அந்தியூர்-முக்கு பாய் கடையிலதான் இருக்கேன்"

"சைக்கிள் கடையிலையா? எவ்ளோ தராரு?"

"1800 வா தராரு, அப்புறம் இந்த பாட்டிலு வாங்கி நம்ம அண்ணாச்சி கடையில விக்கறேன். அதுல பாட்டிலுக்கு 1 ரூவா நிக்கும், இந்தா இப்ப ரெண்டு மூட்டை கொண்டு போறேன்"

"நமக்கு சிப்ட்டு கணக்குதான், வாரம் 500 நிக்கும், வரதுன்னா சொல்லு"

"எங்கப்பா நமக்கு மில்லு ஒத்து வராமத்தான், இங்க போயிட்டு இருக்கேன்"

இப்படியாக நீண்ட பேச்சு அவர் மகன் பீடி பிடிப்பதையும் இவர் மகன் பிராந்தி குடிப்பதையும் பற்றிய கவலையில் போய் நின்றது.
"ஹ்ம்ம் என்னமோப்பா வண்டி ஓடுது"
இந்த வார்த்தைகளுக்குள் புதைந்திருக்கும் அர்த்தங்களை தேடினால் அந்த கதை ஒரு முடியாத கதையாகிவிடும்..
"அப்புறம் பாட்டில வித்திட்டு என்ன வேலை?"

"இன்னிக்கு நம்ம பாப்பாவுக்கு "ஹாப்பி பர்த்டே", கேக் வாங்கியாரசொல்லிச்சு"

"அட! அப்ப ஒரே சந்தோசம்தான்"

"ஹ்ம்ம் கேக்-கும், நைட்டுக்கு மசால் தோசையும் வாகிட்டு போகணும் மீதி காசு இருந்தா"

"அப்பிடியே "நம்ம" கடை பக்கம் போயிட்டு அப்புறம் போலாம்பா"

"சும்மா இர்ரா குமரேசா!? வீட்டுக்கு போகணும்"

"சரி நீ போய் பாட்டில போட்டிட்டு வா; நான் கடையில இருக்கேன்"

"அட சும்மா இருப்பா" - பாட்டில்காரர் ஒரு சிரிப்புடனே சொன்னார்

"நான் இன்னிக்குதான் சம்பளம் வாங்குனேன்; பாத்துக்கலாம் வா" - குமரேசன்
"நெரிஞ்சிபேட்டை வெளிய வாங்கப்பா" - கண்டக்டர்

"தம்பி (என்னைத்தான்) கொஞ்சம் கால அகட்டுங்க" - மூடைகளை எடுத்துக்கொண்டார்.
"டேய் நீ போய் கடையில இரு நான் பாட்டில போட்டிட்டு வரேன்"
"போலாம்; ரைட்" - கண்டக்டர்
பாட்டில் விற்ற காசில் கொஞ்சம் நான்காவது பாட்டிலுக்கு போனது பற்றியோ,"ஹாப்பி பர்த்டே" பாப்பா வீட்டில் காத்திருந்தது பற்றியோ, கேக்-கும், மசால் தோசையும் வாங்கப்பட்டதா என்பதெல்லாம் குமரேசனைதான் கேட்க வேண்டும்.

என் கையில் இருந்தா "சூதாடி" ஏனோ ஒரு பக்கம் கூட புரட்டபடவில்லை…
ஜனா கே

Tuesday, July 15, 2008

நானும் என் மௌனமும்

நதிக்கரையில் அகன்ற மரத்தடியின்
தனித்த இருக்கையில்
நானும் என் மௌனமும்
கிளையை பிரிந்த இலையின்
காதில் கிசுகிசுத்து செல்லும் தென்றல்
என் ஈரமான நினைவுகளை
என்னை ஆற்றுப்படுத்துவதாய்
மெல்லத்தழுவி பின் தள்ளிவிழும்
என் நினைவுசுமந்த இலை
சில குளிர்ந்த தருணங்களையும்
கடைசியாய் ஓர் கனத்த நினைவையும்
காற்றும் இலையும் பேசியிருக்கையில்
தூங்கிபோயிருக்கும் என் மௌனம்
ஒற்றைத்துளி கண்ணீரோடு
மீண்டும் சந்திப்போமென
எனக்குள் சொல்லி மௌனம்
பிரிந்து மெல்ல நடப்பேன்
ஒற்றை இலையோடு

ஜனா கே