Monday, January 20, 2014

ஒரு வானம்பாடியாய் இருப்பது அவ்வளவு எளிதானதன்று

வானம்பாடியாய் இருப்பதற்கு முதலில் ஒரு தகுதி வேண்டும்,

கூண்டுக்குள் அடைபட்டிருக்கக்கூடாது.

கண்டதை எல்லாம் உண்ணும் பழக்கம் அதற்கு கிடையாது.

தேர்ந்த தேர்ந்தெடுத்த உணவுகளை

மிகவும் கவனமாக விழிப்புணர்வோடு உண்ணும் பழக்கம் கொண்டது.

முக்கியமாக பறவை என்ற வகையில்

அதனை கிளியோடு எப்போதும் ஒப்பிட்டுவிடக்கூடாது.

அதன் பாடல்கள் மிகுந்த செறிவும் சரியான உணர்வும் கொண்டவை

எல்லா இடங்களிலும் எல்லா பாடல்களையும் அது பாடுவதில்லை.

அதனினும் முக்கியமாக

யாருடைய பாடல்களையோ சொற்களையோ

அது தன்குரல்வழி சொல்வதுமில்லை.

வானம்பாடியின் பாடல்கள் மிகுந்த தனித்துவம் கொண்டவை.


முதலில் அது பசுமை கொண்ட; வசந்தம் வீசும்,

நச்சுகலவாத காற்றுகொண்ட நிலங்களின்மேல் பறந்துசென்று

அதனதன் குணாதிசயங்களை

தனது ஒவ்வொரு சிறகசைப்பிலும் நெஞ்சோடு சேகரிக்கிறது.


பிறகு கண்களை மூடி

உயிர்கள் வாழ தகுதியற்ற ஆனாலும்

மிகுந்த நம்பிக்கையுடன் வாழும் மனிதர்களும்

அவர்களின் நாய்களும் இருக்கும் நிலம்வரை

பறந்து சென்று

அவர்களின் அவலங்களை போராட்டங்களை

நம்பிக்கைகளை மிகவும் கவனமாக

தன் கண்களின் வழி

நிழற்பட நியாபகங்களாய் மூளையில் பதிந்து எடுத்துவருகிறது

தனது கூட்டிற்கு.



இப்போது பல்வேறு நிலங்களின் பாடுகளையும்

மிகுந்த கவனமுடன் பகுப்பாய்வு செய்கிறது.

செறிந்த சொற்களில் சரியான உணர்வுகொண்ட

தனித்தனியான பாடல்களை பாடிப்பார்க்கிறது.

மிகுந்த கவனமுடன் சரியான உணவெடுத்துக்கொள்கிறது

அடுத்த சில நாட்களுக்கு.


இப்போது வசந்தம் வீசும் நிலத்தின் மேல் பறந்து சென்று

மிகச்சரியான பாடலொன்றை

எல்லோரும் குழுமி இருக்கும் ஒரு சதுக்கத்தில்

தனது இனிமையான குரலெடுத்து

கருப்புநிலத்தின் அவலங்களை தெளிவாகப்பாடத்தொடங்குகிறது…

அந்த பாடல் இப்போது எல்லா நிலங்களின் வானத்திலும் பறந்துசெல்கிறது



வானம்பாடிக்கு தெரிந்தே இருக்கிறது அதனால் முடிந்தது

இந்த பாடலை சரியாகப்பாடுவது மட்டும்தான்


ஆனாலும் அதன் உழைப்பு அபாரமானது

முனைப்பு தன்னலமற்றது

சுயத்தில் தெளிவானது

அதன் முயற்சி மிகுந்த அபாயம் கொண்டது.


அதனால்தான் சொல்கிறேன்,

ஒரு வானம்பாடியாய் இருப்பது அவ்வளவு எளிதானதன்று…


உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/uyirosai/ViewIndex.aspx?eid=306&edtypeid=2

நள்ளிரவில் உலவும் புலிகள்

எல்லோரும்  உறக்கத்திற்கு ஆயத்தமான பிறகு
நான் வெளியே செல்வேன்
ஒரு அணைக்கப்பட்ட கைவிளக்கோடு…
விசையை சுண்டி
நெருப்புசுவாலையைப்  புகைப்பானில் பொருத்தும்போது
மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியே வரும் அந்த ப் புலி…
வனாந்திரத்தின் எதிரில் உள்ள எனது வீட்டில்
அந்தப் புலியுடன் நான் கொண்ட சிநேகம்
எனக்கும் நள்ளிரவிற்கும் மற்றும் அந்தப் புலிக்கும் மட்டுமே தெரியும்
தனது முன்னங்காலை நாவால் எச்சில்படுத்தி
கண்களின் பீளையையோ கண்ணீரையோ துடைத்தபடி
எனக்கு முன்னே வந்து அமரும்
இருவரும் வெகுநேரம் பேசி இருப்போம்
எங்கள் இருப்புபற்றி
எங்களின் கடந்தகால வாழ்வுபற்றி
கண்களில் பற்றிஎரிந்த சுவாலை பற்றி
எங்களின் கட்டற்ற மூர்க்கம்பற்றி
நாங்கள் எப்படி நரிகளை ப் பின்னங்காலால்
அனாயாசமாக எக்கி உதைத்தெரிந்தோம் என்பதுபற்றி
நாங்கள் எப்படி அடிமையாய் மாறிப்போனோம் என்பதுபற்றி
இப்போது எங்களைப் பிடித்து தொங்கும்
இந்த தனிமையைப்பற்றி
விடியலில் நரிகள் விழித்தெழுந்து
பாசம் வழியும் கண்களோடு
எங்களை நோக்கி வர ஆயத்தம் ஆகும்போது
சுவடுகளை அழித்துவிட்டு
மிகுந்த தந்திரமுடன்
யாவரும் அறியாமல் எங்கள் படுக்கைகளுக்குள்
உறங்கப்போவோம்
கடைசியில் ஒன்று சொல்கிறேன்
எனக்கு இதுவரை புலியின் பாசை தெரியாது
புலிக்கும் அப்படியே என்றுதான் நம்புகிறேன்
ஆனால் நாங்கள் இதைதான் பேசிக்கொண்டோம்
என்பதை நான் திண்ணமாகக் கூறுவேன்
ஏனெனில், நள்ளிரவிற்குப் பிறகு
யாவரிடமும் பேசிக்கொள்ள
இதைத்தவிர வேறொன்றும் இல்லை!!!

உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4285


அது அன்று அப்படி வந்தது

வாழ்வின் ஆழத்திலிருந்து
எழுந்து வந்த மனிதன்
அம்மணமாய் இருந்தான்
அசிங்கமாய் இல்லை
என் முன்னால் அமர்ந்து
எனக்காக ஒரு தேநீர் போடச்சொன்னான்
மிகவும் ரசித்துப் பருகினான்
“பாம்புகள் துரத்தும் பரமபதத்தில்
ஏணிகளை மாற்றி வைக்கும்
தந்திரக்காரன் நீ!
புணரும் முன் அவ்வளவு பொய் சொன்னவன்
முடிந்தவுடன் உத்தமன் என்கிறாய்!
தீப்பெட்டி கையிலிருந்தும்
கொளுத்தாமல் நிற்கிறாய்
இருள் பிடிக்குமென
எவனோ சொன்னதற்கு!
இந்த ஆடைகளைப் பார்
எவ்வளவு அழுக்கு
கழட்டிப்போடு!” என்றான்.
அம்மணமாகிவிடுவேன்,
அசிங்கமாகிவிடும்.
நானென்ன அசிங்கமாகவா இருக்கிறேன்?
இல்லை! எனக்கே கொஞ்சம்
அருவருப்பாய் இருக்கிறது
இருப்பினும் இப்படியே
என்னால் வெளியே செல்ல முடியாது.
சரி! இங்கே தற்கொலை செய்துகொள்ள
ஒரு இடம் கிடைக்குமா?
நான் உள்ளறையைக் காட்டினேன்
போய் முயற்சிசெய்!
சொல்லிவிட்டு வாழ்வின்
ஆழத்திற்கே சென்றுவிட்டான்

உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1899

அன்புள்ள அதிகாரிக்கு

அன்புள்ள அதிகாரிக்கு

“டேய் …க்காளி
அடிச்சுப் பேத்துருவேன்
என்ன பெரிய இவனா நீ
தோ பார்!
இதெல்லாம் வேற எவன்டியோ வச்சுக்கோ
என்னால பண்ண முடியாது
என்னா பண்ணுவ நீ!”
வார்த்தைகள் தேநீரில்
கொதித்துக் கொண்டிருந்தன
இரண்டு கோப்பைத் தேநீரும்
பத்துத் தீக்குச்சிகளும் தீர்ந்த பின்,
“யா! இன்னும் ஒன் ஹவர்ல
மெயில் பண்றேன்”
வார்த்தைகள் வெளியில் வந்தன.

சவளை குடியானவனின் வளமை தேசம்
கருமை ஏறிப்போன இரவில்
வெறியேறித் துடிக்கும் விரல்கள்
தட்டும் ஒவ்வொரு பொத்தானிலும்
செத்து விழுவர் ஒவ்வொருவர்
கிளம்பிப் போகும் முன்
சிதறிக் கிடக்கும் குப்பைகளோடு
கூட்டி எடுத்துக் கொட்டிவிட்டுச் செல்வர்
சிதறிய கெட்ட வார்த்தைகளையும்
அடுத்த பகலில்
சபையில் வீற்றிருப்பர்
அமைச்சர்கள் மற்றும் அரசர்கள்!
நாட்டின் வளமை பற்றி
சொல்லிக்கொண்டிருப்பான்
குருதியும் குண்டியும் சுண்டிப்போன
சவளைக் குடியானவன்

இன்று விடிகாலை மிதமான மழை பெய்திருந்தது
குளித்துத் தலை உதறிய
ஈரத்துடன் நின்றிருந்தன
புளியமரங்கள்
இரவைப் பிழிந்து கொட்டிவிட்டபடி
பளீர் தார்ச்சாலை
“வாங்க பாஸு” டீ மாஸ்டரின்
சந்தோசம் என் மீதும் தெறித்தது
மொறுமொறுப்பான மசால்வடைகள்
தின்ன அழைத்தன ஐந்து மணிக்கே
நான்கு மணிக்கு வீட்டில்
விளக்கு எரிந்தது பற்றி
நக்கல் பேசி இருந்தனர்
பேருந்துக்குக் காத்திருந்த
தினக்கூலிகள்
போர்வையை பிழியாமல் உதறியபடி
கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டே
பிச்சைக்காரர்கள்
சாந்தமாய் அசைபோட்டுகொண்டிருந்தன
பொதிகாளைகள்
எப்போதும் குரைக்கும்
குட்டிநாயோடு சேர்ந்து
வாக்கிங் பெண்ணும் குறுநகை
புரிந்தாள்
இன்று விடிகாலை
மிதமான மழை பெய்திருந்தது
*
உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1509

சாமக்குரங்கின் இசையழகி

சாமக்குரங்கின் இசையழகி
இசையோடு கூடிய பாடலின்
குரல் மட்டும் பிரிந்து வந்து
என் காதுகளைக் கடித்தபடி
வந்து கொண்டே
இருந்தது…
குடுகுடுப்பைக்காரன் விட்டுச் சென்ற
வசீகர ஒலியென…
உறக்கத்திற்கு சற்றுமுன்
என் அருகில் படுத்திருந்தது!

ஒரு கடவுச்சொல் வேண்டும்
“இதையெல்லாம் கடந்துபோக
ஒரு கடவுச்சொல் வேண்டும்
பகிரமுடியா கரும்பொழுதுகளை
நுகரமுடியா நுண்வாழ்க்கையை
நட்பெனப்படாத நட்புகளை
நட்புமட்டும் கேட்கும் காதலிகளை
காதல் மட்டும் கேட்கும் தோழிகளை
அடிமைவாசம் அடிக்கும் சம்பளத்தை
பிச்சை எடுக்கும் குழந்தைகளை
செத்தபிறகும் சிதைக்கப்படும் யோனிகளை
கொட்டடியில் தட்டப்படும் குறிகளை
இலக்குகள் அற்ற கவிதைகளை
கவிதைகள் பிறக்காத நிகழ்வுகளை
காகங்கள் கரையாத காலைகளை
சிறுபிள்ளைகள் விளையாடாத மாலைகளை

தலைவனின் சகிக்க முடியா பணிவை
ஓநாய்களின் பாசம் வழியும் கண்களை
கடந்துபோக ஒரு கடவுச்சொல் வேண்டும்,
சொல்லுங்கள் தியானம் செய்பவரே”
“மனம்பிறழ்ந்து போ அல்லது மரணம் தழுவு”
“அதெல்லாம் முடியாதுங்க”
“கடந்து போ அல்லது கலகம் செய்”
“என்னங்க முன்ன சொன்னதயே
வேற மாதிரி சொல்றீங்க?”
“இல்லையெனில், என்னோடு வந்து தியானம் செய்!”
“போய்யா… டவுசரு…”

உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1417

ஒரு சிணுங்கலுக்குப்பின்...

ஒளியற்ற கனவுகளில் 
 மினுங்கி மினுங்கி
 சிணுங்குகின்றன
 சில ஞாபகங்கள்
 பனிக்காலத்து நட்சத்திரங்களாய்.


ஒரு மினுங்கலில் தெரிகிறது
 மேஜையில் ஒற்றை
 மெழுகுவர்த்தி.
 விழிகளில் எரியும்
 இரட்டை மெழுகுவர்த்திகளில்
 இருந்து வழிந்தோடுகிறது சுடுநீர்.


ஒரு சிணுங்கலில் தெரிகிறது
ஒரு சயனஅறை.
மார்பகங்களின் சிறு பிறைகுறியீடுகளில்
உறைந்திருக்கிறது குருதி.
தேம்பல்களில் அடர்த்தியாகிறது இரவு.


ஒரு மினுங்கலில் தெரிகிறது
ஒரு வெள்ளைப்புறா.
வெல்வெட் துணியிலிருந்து விழுகின்றன
ஈரமான சிவப்பு ரோஜா இதழ்கள்
வெளியெங்கும் நிறைகிறது
அன்பின் நறுமணம்

  
ஒரு சிணுங்கலில் தெரிகிறது
பாதி  நிலவும் பாதி சூரியனும்.
விரியும் புன்னகையில்
முழுமையடைகின்றன நிலவும் சூரியனும்
மற்றும் ஒரு மூச்சுத்திணறும் முத்தமும்.


ஒளிநிரப்பும் காலையில்
புதிதாய் பூத்திருந்தது
பனிதாங்கிய
சிவப்பு மலரொன்று



நினைவுகளின் ரணசிகிச்சை

மலைச்சிகரத்தின் உச்சியில் நடைபெறுகிறது
நினைவுகளின் ரணசிகிச்சை
நினைவுகளிலிருந்து கசியும் கசப்பின் ரத்தம்
நஞ்சாகி காற்றில் கரைகிறது

நச்சுக்காற்றின் அழுத்தத்தில்
கால்பிடித்து இழுக்கப்படுகின்றன
நினைவுகள்
கால்களை கட்டிப்பிடித்து கதறிக் கதறி
அழுதுகொண்டிருக்கிறது காதல்

பள்ளத்தாக்கின் ஆழத்திற்குள்
சத்தமின்றி சிதறிப்போகின்றன
நினைவுகள்

மலைமுகட்டின் மேல் மிதந்துகொண்டிருக்கிறது
அழுகை தீர்ந்த காதல்

உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2440

இரண்டு கவிதைகள்

கதவுகளில் வாழ்ந்த பறவைகள்

சாத்தப்பட்ட கதவுகளின் முன் நிற்கும்போதெல்லாம்

உள்ளிருந்து ஒலிக்கிறது கீகீ என்ற பறவையின் குரல்
ஆனாலும் கதவுகளால் தான் வாழ்கின்றன
எலெகட்ரானிக் பறவைகள்
கதவுகளில் வாழ்ந்த பறவைகள்
பற்றி குறிப்புகள் ஏதும் இல்லை

நிர்வாணம்

நிர்வாணம் பற்றி பேசுபவளை  ஒருவனுக்கும் பிடிப்பதில்லை
நிர்வாணம் பற்றி பேசுபவனை ஒருத்திக்கும் பிடிப்பதில்லை
நிர்வாணம் பற்றியே பேசும் இருவர் சேர்ந்து இருப்பதில்லை
இங்கு நிர்வாணம் பற்றி யாருக்குமே தெளிவில்லை



உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2530