Monday, January 20, 2014

புல்வெளியில் கால்நனைப்பவை பனித்துளிகள் அல்ல

ஆகச்சிறந்த நிலக்காட்சி ஓவியம் போல இருந்தது.
அந்தப் பரந்த பசுமைப் பள்ளதாக்கின் ஒருமுனையிலிருந்து
தூரத்தில் நிற்கும் ஒற்றைமரம் நோக்கி
உன்கொலுசுகள் தெரிய
தங்கநிறசரிகை கொண்ட பாவாடையை
சற்றே தூக்கிப்பிடித்தபடி
நீ நடக்கத் தொடங்கியபோது.

அந்த குளிர்நிறைந்த இரவில்தான்
உன்வீட்டில் எல்லோரும் உறங்கியபின்
வரச்சொல்லி இருந்தாய்.

அந்த நாளில் உன் வீட்டில்
எல்லாரும் உறங்குவார்களா எனத்தெரியாது
இரவு கவிழ்ந்தவுடன் காத்திருக்கத்தொடங்கினேன்
நீ என்ன சொல்வாய் என எனக்குத் தெரிந்தே இருந்தது
நான் என்ன செய்வேன் என்றும் உனக்குத் தெரிந்தே இருந்தது.
அப்புறம் எதற்கு இந்தப் பாசாங்குகள்.
தெரிந்தே இருப்பினும் சொல்லப்படாதவரை
சொற்களுக்கு அர்த்தமில்லை. உணரப்படாத முத்தம் போல

வந்தாய். நின்றாய்.சொன்னாய்.
மிக்க அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்தது நிலவு.
என்னிடம் வார்த்தைகள் இல்லை.
ஆகாயத்திற்கும் புல்வெளிக்கும்
இடையிலான வெறுமை முழுதும்
என்னிடம் இருந்தே நிரம்பியதாக
விம்மிக்கிடந்தது நெஞ்சம்.

திரும்பி நடக்கத் தொடங்கினாய்
ஒரு தொல்கனவென.
உனக்குத் தெரிந்தே இருக்கும்
என்ற நம்பிக்கையில்
சொல்லாமல் விட்டேன்
நீ நடந்து செல்லும் புல்வெளியில்
உன் கால்நனைப்பவை பனித்துளிகள் மட்டும் அல்ல.

உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3989

No comments: