Monday, January 20, 2014

பிங்-பாங் வார்த்தைகள்


பிங்-பாங் வார்த்தைகள்
உணர்ச்சிகளுக்கேற்ற சொற்கூட்டங்களை
நதியடியின் கூழாங்கற்களைப் போல
நாவினடியில் இளைப்பாறவிடுங்கள்
நம் விவாதங்களில் நம்மிடையே அவை வேலை செய்யட்டும்.
தட்டையான வார்த்தைகளை நீங்கள் சொல்லும்போது
வழவழப்பான ஒரு அட்டைப்பூச்சியை நெருங்குவதைப் போல
அதை நெருங்கிவர மிகவும் அசூயையடைகிறேன்.
அந்த இடைவெளியில்
என்னையொரு ஆமையென எண்ணி
என்னைவிட்டு விலகிப் போய்விடுகிறீர்கள்.
பிறகு என் சொற்களோடு நான் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன்
மனம் பிறழ்ந்தவனென என்னைவிட்டு முற்றிலுமாக விலகிப்போகிறீர்கள்
மிகுந்த பயமுடன்.
நான் முன்னிலும் தீவிரமாக சொற்களை சேர்த்துக்கொண்டு
மிகுந்த வன்மமுடன் கவிதை எழுதுகிறேன்
உலகத்தை பிங்-பாங் பந்தென சுவற்றில் எறிந்தபடி


கவிதைக்கு வெளியே ஏதோ இருக்கிறது
கவிதைக்கு வெளியே தனிமை தலைநீட்டி உங்களைப் பார்த்துக் கத்தும்போது
நீங்கள் மிகவும் பயந்துபோய் நெருங்கிவரத் தயங்குகிறீர்கள்.
ஓங்கி ஒருமுறை அதை நீங்கள் அடித்திருந்தால்
இந்நேரம் அது செத்துப்போயிருக்கும் இந்த வரிகளோடு சேர்ந்து.

பகல் முழுதும்
என் தோள்களைச் சுற்றிக்கொண்டே திரியும் அந்த வேதாளம்
நள்ளிரவிற்கு மேல் நீருக்குள் அமிழ்ந்துபோவதென
இருட்கடலோடு இரண்டற கலந்துவிடுகிறது
பிறகு கடல் என்னைச்சுற்றி அலையடித்துக்கொண்டிருக்கிறது.

அந்த புட்டியை உள்ளங்கையில் வைத்து உருட்டியவாறே
கருப்புநிற தொலைபேசியை எடுத்து எண்களை சுழட்டுகிறேன்
முன்னும் பின்னுமாய் உருண்டு சுழல்கிறது உயிர்.
அதோ அந்த இரண்டு வீடுகளுக்கு இடைப்பட்ட மிகவும் குறுகலான பாதையின்
இருமருங்கிலும் நின்றிருக்கும் பாதுகாப்பு அரண்களின் வேர்களில்தான்
வாழ்ந்திருக்கிறது வீடுகளின் தனிமை.

நன்றி உயிரோசை : http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5207 

No comments: