Monday, January 20, 2014

விகடனில் வெளியான கவிதைகள் -1

மழை

அந்த நிழற்குடையின் கீழ்
மழையில் நனைந்த அனைவரும்
நெருக்கிக்கொண்டு நிற்கிறோம்
மழை விட்டு கலைந்தபோதுதான்
கவனித்தேன்,
என் இடப்புறம் நின்றிருந்தவர்
கையில் மடிக்கணினி இருந்தது
வலப்புறம் நின்றிருந்தவர்
கையில் திருவோடு இருந்தது
என் கையில் மழை இருந்தது

ஜீவகாருண்யம்

“எஜமானி குழந்தைபெற்றுவிட்டாள்”
டைகரும், ரோஸியும் கிசுகிசுக்கின்றன
சந்தோசமாக வால்களை ஆட்டியபடி!
அக்கம் பக்கத்து மனிதர்களை
அன்று மட்டும் முறைக்காமல்
வாலாட்டி வரவேற்றுக்கொண்டே இருந்தன
வீட்டு மனிதர்களை போலவே!
கவிதைப் புத்தகங்களை
கலைத்துப்போட்டு விளையாடுகிறாள்
சின்ட்ரெல்லா.

மழலை மழை

“பாப்பா கவிதை படிக்கறீங்களா
எந்த கவிதை பிடிச்சிருக்கு சொல்லுங்க!”
எனக் கொஞ்ச
பால்பற்கள் தெரிய “ப்ப்பூவா…” என
புதுக்கவிதை  ஒன்றை சொல்கிறாள்
அவ்வளவு ரம்யமாய் இருக்கிறது
ப்ப்பூவா கவிதைகளின் இசை

இசை வீடு

கருப்பு வெள்ளை கற்கள்
பதிக்கப்பட்ட வீட்டில்
கொலுசுமணிகள் சிணுங்க
தத்தித் தத்தி நடக்கையில்
பிரியாகுட்டியின் வீடு
பியானோ வீடாகிறது

அடுக்குமாடி குடியிருப்பு

அந்த அடுக்குமாடி குடியிருப்பின்
வாகனங்கள் நிறுத்துமிடத்தில்
சொற்ப எண்ணிக்கை கூடி இருந்தது.
பக்கத்து வீட்டின் ஜன்னலில்
தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது.
மெல்லிய விசும்பல்கள் எழுந்தன.
லேசான சலசலப்புக் கேட்டது.
எதிர்புறம் உள்ள சாலை
எப்போதும் போல் ஆனது.
தண்ணீர்விட்டுக் கழுவியதில்
சிதறிய ரோஜா இதழ்களும்
ஒரு தலைமுடியும் சேர்ந்துபோனது.
செய்திகள் பார்க்கவென
யாராலோ குறைந்த ஒலியுடன்
தொலைக்காட்சி போடப்பட்டது.
இன்று இந்த வீட்டில்
மிக்க நாகரீகமாக
ஒரு இழவு நடந்தேறியது.

No comments: