Monday, January 20, 2014

ஒரு சிணுங்கலுக்குப்பின்...

ஒளியற்ற கனவுகளில் 
 மினுங்கி மினுங்கி
 சிணுங்குகின்றன
 சில ஞாபகங்கள்
 பனிக்காலத்து நட்சத்திரங்களாய்.


ஒரு மினுங்கலில் தெரிகிறது
 மேஜையில் ஒற்றை
 மெழுகுவர்த்தி.
 விழிகளில் எரியும்
 இரட்டை மெழுகுவர்த்திகளில்
 இருந்து வழிந்தோடுகிறது சுடுநீர்.


ஒரு சிணுங்கலில் தெரிகிறது
ஒரு சயனஅறை.
மார்பகங்களின் சிறு பிறைகுறியீடுகளில்
உறைந்திருக்கிறது குருதி.
தேம்பல்களில் அடர்த்தியாகிறது இரவு.


ஒரு மினுங்கலில் தெரிகிறது
ஒரு வெள்ளைப்புறா.
வெல்வெட் துணியிலிருந்து விழுகின்றன
ஈரமான சிவப்பு ரோஜா இதழ்கள்
வெளியெங்கும் நிறைகிறது
அன்பின் நறுமணம்

  
ஒரு சிணுங்கலில் தெரிகிறது
பாதி  நிலவும் பாதி சூரியனும்.
விரியும் புன்னகையில்
முழுமையடைகின்றன நிலவும் சூரியனும்
மற்றும் ஒரு மூச்சுத்திணறும் முத்தமும்.


ஒளிநிரப்பும் காலையில்
புதிதாய் பூத்திருந்தது
பனிதாங்கிய
சிவப்பு மலரொன்று



நினைவுகளின் ரணசிகிச்சை

மலைச்சிகரத்தின் உச்சியில் நடைபெறுகிறது
நினைவுகளின் ரணசிகிச்சை
நினைவுகளிலிருந்து கசியும் கசப்பின் ரத்தம்
நஞ்சாகி காற்றில் கரைகிறது

நச்சுக்காற்றின் அழுத்தத்தில்
கால்பிடித்து இழுக்கப்படுகின்றன
நினைவுகள்
கால்களை கட்டிப்பிடித்து கதறிக் கதறி
அழுதுகொண்டிருக்கிறது காதல்

பள்ளத்தாக்கின் ஆழத்திற்குள்
சத்தமின்றி சிதறிப்போகின்றன
நினைவுகள்

மலைமுகட்டின் மேல் மிதந்துகொண்டிருக்கிறது
அழுகை தீர்ந்த காதல்

உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2440

No comments: